ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி, சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட கொடூர நெரிசல் மற்றும் விபத்தின் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயுட்டா நகரின் கடல் எல்லையில் 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் தடுப்புச் சுவரை அமைக்கும் பணியை ஸ்பெயின் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் நிலம் மற்றும் கடல் வழியாக சுமார் 70,000 மக்கள் செயுட்டாவிற்குள் நுழைய முயன்றதாக ஸ்பெயின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் 48,000-க்கும் மேற்பட்டோர் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மொராக்கோவிற்கே திரும்ப அனுப்பப்பட்டனர். எல்லையில் உள்ள பாறை மற்றும் வேலி மீது ஏற முயன்றபோதும், கடலில் மூழ்கியும் குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருந்திரளான புலம்பெயர்ந்தோர் இவ்வாறு நுழைந்தமைக்கு பொருளாதார நெருக்கடியும், சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுமே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
குறித்த, நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா கூடுதல் இராணுவம் மற்றும் காவல்துறையினரை எல்லைப் பகுதியில் குவித்துள்ளார்.
இந்த நிலையில், மனிதக் கடத்தல் கும்பல்களே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும், மொராக்கோ ஸ்பெயினின் நம்பகமான கூட்டு நாடுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எல்லைப் பிரச்சினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எல்லைப் பாதுகாப்பைக் பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என 22 ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஸ்பெயினுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை இத்தாலி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.