நௌல் சூறாவளியால், தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்ததான அறிவிப்புகளை சீன தேசிய வானிலை மையம் வழங்கி வருவதுடன், இன்று அதிகாலை 3:50 மணியளவில் குவாங்டாங்- ஹுய்ஷோ பகுதியில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளதாகவும், சீனாவின் கரையைக் கடந்த மிக வலுவான சூறாவளி இது என்றும், அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமொன்று கூறியுள்ளது.
நௌல் சூறாவளியானது, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றை வீசியதுடன், உள்நோக்கி நகர்ந்து படிப்படியாக வலிமை இழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு, ஹொங்கொங்கில் பலத்த காற்றினால் கட்டிடப் பலகைகள் சரிந்து விழுந்தன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக ஹொங்கொங் விமான நிலையத்தில் சுமார் 350 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
மேலும், ஹொங்கொங்கில் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.