ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் , மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.
மேலும்,ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’ நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் வரைபட தகவல் ஒன்றினை வழங்கியுள்ளது.
“பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” எனும் எச்சரிக்கை தகவல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
குறித்த தகவலானது உலகில் உள்ளவர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளதுடன், ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என்ற கருத்தும் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன.
மொஜ்தபா காமெனியின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த எச்சரிக்கைகள் வெளியாகியதன் பின்னர் “ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தனது ஆக்ரோஷமான கருத்தினை வெளியிட்டுள்ளதால் வளைகுடாப் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.