ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடந்து அவரை எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள்,மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் அவற்றை வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.
சுமார் 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு சித்திரை மாதம் இங்கிலாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் பல கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை அமெரிக்கா விதிக்கும் என தெரிவித்த அசாஞ்சே, தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டாம் என லண்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தர்.
இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம் , அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக இரத்து செய்வதாக உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே எப்போது வேண்டுமானாலும் நாடுகடத்தப்படலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
#world