ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

world 8

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான எச்சரிக்கை” விடுத்துத் தடுத்ததாக ஈரான் கடற்படை இன்று (மே 4, திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. ஜலசந்திக்குள் நுழைய வேண்டாம் என்று வெளிநாட்டுக் கடற்படைகளுக்கு ஈரான் விடுத்த தொடர் எச்சரிக்கைகளை மீறிச் செயல்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய அரசு ஊடகமான ‘ஃபார்ஸ்’ (Fars) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜஸ்க் (Jask) துறைமுகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த அமெரிக்கப் போர்க்கப்பல் நீரிணையைக் கடக்கும் முயற்சியைக் கைவிட்டுப் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கத் தரப்பு இந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்த தகவலை மறுத்துள்ளதுடன், தமது கப்பல்கள் எவையும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்களை விடுவிக்கும் “புரொஜெக்ட் ஃப்ரீடம்” (Project Freedom) என்ற மனிதாபிமான நடவடிக்கையை அமெரிக்கா திங்கட்கிழமை தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் சம்பந்தப்படாத நாடுகளின் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரானிய தேசிய பாதுகாப்பு கமிஷன் இந்த நடவடிக்கையை “போர்நிறுத்த மீறல்” என்று எச்சரித்துள்ளது. தற்போது ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு கடற்படைத் தடைகளை (Blockades) விதித்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 850-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இப்பகுதியில் சிக்கியுள்ள நிலையில், ஈரானின் ஆயுதப் படைகளின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் நகரக்கூடாது என்று ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Exit mobile version