பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
விமான தாக்குதல் நடைபெறும் போது ஒலிக்கும் அபாய ஒலி சைரனை ஒலிப்பது,முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தளங்களை பாதுகாப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போர்க்காலத்தின் போது எப்படி பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட போர்க்கால ஒத்திகைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களில் மே 7ம் தேதி போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என சரி பார்க்க வேண்டும்.
போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ‘கிராஷ் பிளாக் அஷட்’ நடைமுறைகள் தொடர்பாகவும், முக்கிய கேந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மீட்பு திட்டங்கள் தொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வட மாநிலங்களில் ஏற்கனவே, சில போர் ஒத்திகைகள் நடந்து வருகின்றன. தற்போது மற்ற மாநிலங்களுக்கும் இத்தகைய அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.