இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு
இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக களத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி. இவரையும், இவருக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய இருப்பதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயது Tyler Anderson என்பவர் இந்த வழக்கில் உள்ளூர் நேரப்படி திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதிவு செய்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு குறுந்தகவல்களில், அவர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகள் விரைவாகச் செயல்பட்டதாக FBI தாக்கல் செய்துள்ள வாக்குமூலம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த குறுந்தகவல் குறித்து பொலிசாருக்கு உடனடியாக புகார் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் ஆண்டர்சனுக்கு தொடர்புடையது என்ற முக்கிய தகவல்களையும் பரப்புரை நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதுவே ஆண்டர்சனை கைது செய்ய உதவியதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல் விடுத்த ஆண்டர்சனை கைது செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுத்த சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் ஆண்டர்சன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் ஆகியவற்றை எதிர்கொள்கிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.