செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவும் ஆதரவளிக்கவேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
“மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம். நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துணை செயலாளரின் பதில் மே 15 ம் திகதி கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
அந்த பதிலில் அவர் இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் உண்மை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும்.
இலங்கையின் யுத்தத்தின் முடிவில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி நிலைப்பாட்டப்படவேண்டும் என்பதற்கான உங்களின் தனிப்பட்டஆதரவிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன்.
இலங்கையின் வடபகுதியில் மூன்று குழந்தைகளின் உடல்களுடன் சமீபத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்,இந்த அட்டுழியங்கள் எவ்வளவு புதியவை என்பதை அதிர்ச்சியூட்டும் நினைவுபடுத்தல்களாக காணப்படுகின்றன.
2024 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் உடல்களை தோண்டுவதற்கான போதிய வளங்கள் இலங்கையிடம் இல்லை என தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டிருந்தது. இந்த அடிப்படையிலும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றிற்கான பிரிட்டனின் ஆதரவின் அடிப்படையிலும் இலங்கைக்கு இந்த விடயத்தில் குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட திட்டங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும்.
இலங்கை அரசாங்கத்துடனான இரு தரப்பு ஈடாட்டங்களின் போது உங்கள் திணைக்களம் – அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் – இந்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக தக்கவைத்துக்கொண்டால் அதற்கும் நன்றியுடையவளாகயிருப்பேன்.
மார்ச் மாதம் நீங்கள் தடைகளை அறிவித்தவேளை சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்,பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தொழில்கட்சியின் நீண்டகால பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றினீர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தது போன்று ,யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற எனது வேண்டுகோளை நீங்கள் கருத்தில் எடுப்பீர்கள் என கருதுகின்றேன்.
உயிர்பிழைத்தவர்கள்,பதிலை தேடும் குடும்பங்கள் ,இந்த குற்றங்களின் நிழலில் வளர்ந்த அடுத்த தலைமுறை நாங்கள் கடன்பட்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.