லண்டனை சென்றடைந்தார் ஜனாதிபதி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதியை வரவேற்பதற்காக இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்திய பணிப்பாளருமான பென் மெல்லர், பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வருகைத் தந்திருந்தனர்.

நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (21) நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டில் இல்லாத காரணத்தினால், அவரது அமைச்சு பொறுப்புக்களை நிர்வகிக்க இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன், பதில் நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிடிய, பதில் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூகவூட்டல் அமைச்சராக கீதா குமாரசிங்க, பதில் தொழில்நுட்ப அமைச்சராக கனக ஹேரத் மற்றும் பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 09 18 at 12.43.36 PM

#SriLankaNews

Exit mobile version