மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்க முற்பட்டால், அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையே ஈரான் தனது இலக்குகளாகக் கொள்ளும்.
இந்தத் தாக்குதல் அந்தத் தளங்களை அமைந்துள்ள நாடுகளுக்கு எதிரான போராகக் கருதப்படக் கூடாது. இது முழுக்க முழுக்க அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் இறைமையைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்யப்போவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓமனில் நேற்று (06) இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தித் திட்டம் தொடர்பான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் “நேர்மறையானவை” என வர்ணிக்கப்பட்ட போதிலும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தனது பாதுகாப்பு நிலையைத் தயார் நிலையில் வைத்திருப்பதை அமெரிக்காவிற்கு உணர்த்தவே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் இத்தகைய காட்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.