பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள்
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது, ஒரு எரிமலை சீற்றம் உடனடியாக இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது என நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் சுமார் 4 மணியளவில் நிலநடுக்கங்கள் பதிவாகத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது Fagradalsfjall மலைக்கு அடியில் இருந்து உணரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமுறை எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது என்றே கூறுகின்றனர்.
தோராயமாக 2,200 நிலநடுக்கங்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், தலைநகர் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இதில் நான்கு முறை மட்டும் ரிக்டர் அளவில் 4 இலக்கத்தை தொட்டதாகவும், இது லேசான நிலநடுக்கமாகவே கருதப்படுகிறது.
ஆனால் இச்சம்பவங்களை அடுத்து விமான சேவைகளுக்கான எச்சரிக்கையை பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தி இருந்தனர். இந்த எச்சரிக்கையானது விமான சேவைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எரிமலை சீற்றம் எதுவும் உணரப்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்றே கூறுகின்றனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செயற்பாட்டில் இருக்கும் எரிமலைப் பகுதி ஐஸ்லாந்து என்றே கூறப்படுகிறது.
கடந்த 2010ல் Eyjafjallajokull எரிமலை சீற்றம் காரணமாக 100,000 விமான சேவைகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. சுமார் 10 மில்லியன் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 Comment