கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை… பகீர் தகவல்

tamilni 312

கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை… பகீர் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 400 பயங்கரவாத இலக்குகளை தாக்கி பல ஹமாஸ் தளபதிகளை கொன்றதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாக்குதலின் உக்கிரத்தை இனி குறைப்பதாக இல்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஹமாஸ் சிறைபிடித்து சென்ற இரு இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அந்த விடயத்தில் இஸ்ரேல் தரப்பு ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகள் பேரில் காஸா பகுதியில் உக்கிரத் தாக்குதலை முன்னெடுக்கவே இஸ்ரேலின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, காஸா பகுதியில் செயல்படும் மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பங்கு மின்வசதி, போதிய ஊழியர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததால் செயல்பட முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 7ம் திகதியில் இருந்தே ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதுவரை காஸா பகுதியில் மட்டும் 5,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா பகுதியை மொத்தமாக இலக்கு வைத்து உக்கிரமாக தாக்கி வருகிறது இஸ்ரேலிய வான்படைகள். கான் யூனிஸின் அதிக மக்கள் தொகை கொண்ட அமல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

காசா நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இஸ்ரேல் வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதனிடையே, உயிர் தப்பிய ஒருவர் தெரிவிக்கையில், நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம், திடீரென்று ஒரு பெரிய வெடிக்கும் சத்தம். எனது குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர் என்றார்.

இந்த நிலையில், ஹமாஸ் படைகள் முன்னெடுக்கும் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இதுவரை நடந்த போரில் கடந்த 24 மணி நேரம் மிகவும் கொடூரமானது என குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version