அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம் 19-ஆம் தேதி அதிபர் டிரம்ப், 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரைப் பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதால், அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் பொருந்தும் என்றும், ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (USCIS) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எஃப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள், தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது, உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உட்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்குப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.