இந்தியா மீது கனடா பகிரங்க குற்றச்சாட்டு
கனடாவுக்கு (Canada)அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா என கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனேட்டர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு (National Security and Intelligence Committee of Parliamentarians – NSICOP), வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியா மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களில் தலையிடுதல், கனேடிய அரசியல்வாதிகள், இன அடிப்படையிலான ஊடகங்கள் மற்றும் இந்திய – கனேடிய கலாச்சார சமுதாயங்களை குறிவைத்தல் ஆகிய விடயங்கள் மூலம் இந்தியா இந்த செயல்களைச் செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனடாவின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களில் தலையிடுவதன் மூலம் இந்தியா கனடாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடாக மாறியுள்ளது என NSICOPஇன் அறிக்கை அறிவித்துள்ளது.
கனேடிய ஜனநாயகத்தின் முதல் அச்சுறுத்தலாக சீனா விளங்குவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இரண்டாவது இடத்தில் முன்பு ரஷ்யா இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த அறிக்கைக்கு இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.