இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கான இருப்பிட மற்றும் வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது அண்மையில் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதுவரிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.
அதுமாத்திரமன்றி இந்திய அகதி முகாம்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனைச் செவிமடுத்த இந்தியத் தூதுவர், மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கு அவசியமான இருப்பிட மற்றும் வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும், இது பற்றி அரசுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்.