உலகம்
இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக கூகுள் மீது குற்றச்சாட்டு
இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக கூகுள் மீது குற்றச்சாட்டு
இஸ்ரேலுக்கு இராணுவத்திற்கு கூகுள் உதவி செய்வதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் – காசா இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000ற்க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த இஸ்ரேல், காசா மருத்துவனைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக கருத்துக்களை முன்வைத்தது.
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் இராணுவத்தோடு இணைந்துள்ள புதிய திட்டமான ப்ராஜக்ட் நிம்பூஸ் (Project Nimbus)சை இரத்து செய்யக் கோரி கூகுள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளைப் போரில் பயன்படுத்தி பாலஸ்தீனர்களை கொல்வதாகப் போராட்டக்காரகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
‘இனப் படுகொலைக்கு துணை நிற்காதே’ ‘இனப்படுகொலையால் இலாபம் ஈட்டாதே’ என்பது போன்ற வாசகங்களை அடங்கிய பலகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் இராணுவத்திற்கு க்ளவுட் வசதிகளை (cloud services) அளிக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சக்திவாய்ந்த கணினி வளங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாததால் கூகுளின் தகவல்கள் மற்றும் கணினி வளங்களை க்ளவுட் வசதிகள் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் கூகுளை இந்தத் திட்டத்திலிருந்து விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.