இளைஞர்கள் காதலிக்கிறார்கள், அதைக் குறித்து கதை கதையாகச் சொல்கிறார்கள். பல திரைப்படங்களும் அதைத்தான் செய்கின்றன. ஆனால், பெரும்பாலான திரைப்படங்களில் காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆவதுடன் திரைப்படம் முடிந்துவிடும்.
திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று அவர்களை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்த பிறகும், எத்தனை தம்பதியர்களின் காதல் மாறாமல் அப்படியே இருக்கிறது?
அப்படி, பல ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஒரு கதைதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தியின் கதை எனலாம்.
தான் ஒருமுறை டிக்கெட் இல்லாமல் 11 மணி நேரம் ரயில் பயணம் செய்ததாகக் கூறுகிறார் நாராயணமூர்த்தி. அது அந்தக் காலம், நாங்கள் காதலித்த காலம் என்று கூறும் அவர், எல்லாவற்றிற்கும் காரணம் காதல்தான் என்கிறார்.
தன் காதலியான சுதாவை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக, நாராயணமூர்த்தி டிக்கெட் இல்லாமல் 11 மணி நேரம் ரயிலில் பயணம் செய்தாராம்.
அப்போது நான் காதலில் இருந்தேன் என்று கூறிய நாராயணமூர்த்தி, அது ஹார்மோன்கள் உச்சத்திலிருந்த இளம் வயது, அது எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியும் என்று கூற, அழகாக வெட்கப்படும் சுதா, தன் முகத்தைக் கையால் மறைத்துக்கொள்வதைக் காண, ஆயிரம் கண் வேண்டும். எத்தனை பேர் இப்படி வயதான பிறகும் ஒருவர் மீது ஒருவர் காதலுடன் இருக்கிறார்கள், அதுவும் இவ்வளவு பொறுப்புகளும், செல்வமும் வந்த பிறகும்!
நான் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு திருமண உறவைக் குறித்து சொல்கிறேன் என்று கூறும் நாராயணமூர்த்தி, தம்பதியரின் உறவின் மத்தியில் அழகு என்னவென்றால், அது குழந்தைகள்தான் என்கிறார். திருமண உறவு நீடிக்கவேண்டுமென்றால், தம்பதியர் இருவருமே, தங்கள் உறவை சுவாரஸ்யமாக்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்யவேண்டும் என்கிறார் அவர்.
இந்த வீடியோ, இரண்டு நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்தவர்கள், இருவருக்கும் இடையிலான இந்த உறவு என்ன அழகு என நெகிழ்கிறார்கள். ஒருவர், சுதா மேடம் வெட்கப்படுவதைப் பார்க்கவே அழகாக இருக்கிறது என்று கூற, மற்றொருவரோ இது ஒரு அருமையான காதல் கதை என்கிறார்.
இந்த நாரயணமூர்த்தி, சுதா தம்பதியர், பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் பெற்றோர், அதாவது, பிரதமரின் மாமனார், மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.