கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 51 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த தாக்குதல்தாரியின் மேன்முறையீட்டு மனு மீதான ஒரு வார கால விசாரணை நாளை (09) வெல்லிங்டன் நீதிமன்றத்தில் ஆரம்பமாகிறது.
இந்த மேன்முறையீட்டு விசாரணையில் நீதிமன்றம் பிரதானமாக இரண்டு விடயங்களை ஆராயவுள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் முன்னதாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற அனுமதி கோரியுள்ளார்.
சிறைச்சாலையில் தான் “சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற” சூழலை எதிர்கொண்டதாகவும், அதனால் தர்க்கரீதியான முடிவுகளை எடுக்கும் திறனை இழந்த நிலையில் வாக்குமூலம் அளித்ததாகவும் அவர் வாதாடுகிறார்.
2020 ஆம் ஆண்டில், நியூசிலாந்து சட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக இவருக்குப் பிணையில் வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டு 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்திருக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகள் தாமதமாக இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது சட்டரீதியாகப் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்த மேன்முறையீடு தங்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சியையும் வலியையும் அளிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச் தாக்குதல் நடந்து சுமார் ஒரு மாத இடைவெளியில், 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இலங்கையில் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அப்போதைய இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, நீதிமன்றம் இந்த விசாரணையைத் தீவிரவாதக் கருத்துக்களையோ அல்லது வெறுப்புப் பேச்சுகளையோ பரப்புவதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்த எவ்வித இடமும் அளிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

