நீடித்த உலகளாவிய பொருளாதார இடையூறுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவும் நோக்கில், கட்டம் கட்டமான நிதிசார் உதவித் திட்டங்களை உலக வங்கி குழுமத்தின் (World Bank) தலைவர் அஜய் பங்கா கோடிட்டுக் காட்டியுள்ளார். தற்போதைய மோதல்கள் மற்றும் எரிசக்தி விநியோகச் சேதத்தின் விளைவுகள் பலர் எதிர்பார்ப்பதை விட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை விரைவாகக் கிடைக்கச் செய்வதே உலக வங்கியின் முதல் முன்னுரிமை என அஜய் பங்கா தெரிவித்தார். இதற்கமைய, உலக வங்கியின் நெருக்கடி பதிலளிப்புத் தொகுப்பின் கீழ் நிதி அமைச்சர்கள் உடனடியாக 20 பில்லியன் முதல் 25 பில்லியன் அமெரிக்க டாலர் வரை பெற வாய்ப்புள்ளது. இதனை “உண்மையான பணம்” (Real Money) என்று விவரித்த அவர், நாடுகள் தங்களின் நிதி வரம்புகளைக் கருத்தில் கொண்டு இந்த வளங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், இவை மானியங்கள் அல்ல என்பதையும் நினைவுறுத்தினார்.
மத்திய கிழக்கு மோதல் மற்றும் விநியோகத் தடைகள் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால், உலக வங்கி தனது 2025-ஆம் ஆண்டுத் திட்டங்களிலிருந்து 50 பில்லியன் முதல் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விடவும் 30 பில்லியன் டாலர்கள் கூடுதலாகும். நிலைமைகள் மேலும் மோசமடைந்தால், சுமார் 15 மாத காலப்பகுதிக்குள் மொத்தமாக 80 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதிப் பங்களிப்பை வழங்க உலக வங்கி தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டாலும் கூட, உலகளாவிய விநியோக அமைப்புகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என்று அஜய் பங்கா எச்சரித்தார். எனவே, இந்த இடையூறுகளை ஒரு குறுகிய கால நிகழ்வாகக் கருதாமல், நீண்ட காலப் பொருளாதாரப் பாதிப்புகளை நிர்வகிப்பதற்கான “கருவித்தொகுப்பை” (Toolkit) உருவாக்குவதே உலக வங்கியின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.