இலங்கையின் உள்ளூர் எரிபொருள் விநியோகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 36,700 மெட்ரிக் டன் ஆக்டேன் 92 (Octane 92) பெட்ரோல் அடங்கிய புதிய கப்பல் ஒன்று இன்று (ஏப்ரல் 15) நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பண்டிகைக் காலப்பகுதியில் பெட்ரோல் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் நோக்கில், இந்த எரிபொருள் இருப்பு இந்தியாவிலிருந்து அவசரமாகக் கோரப்பட்டது. தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்தக் கப்பலிலிருந்து பெட்ரோலை உடனடியாக இறக்கி, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், போக்குவரத்துத் தேவைகளுக்கான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த புதிய இருப்பு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் விநியோகம் தற்போது வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் எரிசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.