மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தின் வேகத்தைத் திடீரெனச் சீர்குலைத்துள்ளதால், வளர்ச்சி கணிப்புகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தள்ளப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார். முன்னதாக உலகப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை எட்டும் எனக் கணிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய மோதல்கள் அந்த எதிர்பார்ப்புகளைத் தலைகீழாக மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவித்த ஜார்ஜீவா, போரின் கால அளவு மற்றும் உள்கட்டமைப்பு அழிவின் அளவு ஆகியவையே உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என விளக்கினார். போர் விரைவில் முடிவுக்கு வந்தால் விரைவான மீட்பு சாத்தியம் என்றும், மாறாக மோதல் நீடித்தால் உலகப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு, சில நாடுகள் பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகப் பொருளாதாரத்தில் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போதைய மோதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜீவா வலியுறுத்தினார். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் என்பதால், இவற்றின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் சமமாகப் பாதிக்கும். குறிப்பாக, மார்ச் மாதத்தில் ஏற்பட்ட விநியோகத் தடைகளைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் புதிய சரக்குக் கப்பல்கள் புறப்படாமையினால் பொருளாதார நிலைமைகள் மேலும் மோசமடையும் என அவர் கவலை வெளியிட்டார்.
அதிகரித்து வரும் இந்த நிச்சயமற்ற சூழலில், சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பது அவசியமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரே ஒரு கணிப்புப் பாதையை மட்டும் முன்வைக்காமல், பல்வேறு பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு உறுப்பு நாடுகளுக்குத் தேவையான கொள்கை ஆலோசனைகளை வழங்க ஐஎம்எஃப் தயாராகி வருவதாக ஜார்ஜீவா மேலும் தெரிவித்தார்.