கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை என தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணி, கடந்த சனிக்கிழமை கரூரில் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக நாமக்கல்லில் இடம்பெற்ற தவெகவின் பேரணி குறித்து தமிழ்நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல்லில் இடம்பெற்ற கூட்டத்திற்கு விஜய் வேண்டுமென்றே தாமதமாக வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கரூருக்கு முன்னதாக நாமக்கல்லில் நடைபெற்ற பிரசாரத்திலும் பலர் மயக்கம் அடைந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாமக்கல் கூட்டத்திற்கு, சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு விஜய் வருவார் என கூறிவிட்டு பிற்பகல் 2.45 மணிக்குத்தான் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக, விஜய் காலை 8.45 மணிக்கு வந்துவிடுவார் என நினைத்து ஏராளமான மக்கள் காலை முதலே குறித்த இடத்தில் கூடியதாகவும் கூறப்படுகின்றது.
அது மாத்திரமன்றி, நாமக்கல்லில் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி விஜய் வேண்டும் என்றே தாமதம் செய்தார் எனவும் விஜய் கால தாமதம் செய்ததால் கட்டுக்கு அடங்காமல் கூட்டம் கூடி பொலிஸாருக்கு கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் காலதாமதம் செய்தால் கூட்டத்தில் மக்களுக்கு மூச்சுத்திணறல், கொடுங்காயம், உயிரிழப்பு ஏற்படும் என்று பொலிஸார் எச்சரித்தும் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதனை கண்டுக்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதம் செய்ததாகவும் நாமக்கல்லில் இடம்பெற்ற விஜய்யின் பேரணி தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தமிழ் நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விடயம் தற்போது தமிழ்நாட்டை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ள கரூர் பேரணியின் 41பேர் உயிரிழப்பு விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.