மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரின் வருகையை கண்டவுடன் விற்பனைசெய்த மரக்கறிகளையும் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவன் அம்மன் வீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில். காலை வேளையில் மரக்கறி வியாபாரிகள் அவ்விடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அவ்விடத்தில் சனக்கூட்டம் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸார் ஏற்கனவே அவ்விடத்தில் மரக்கறி வியாபாரம் செய்ய தடைவிதித்திருந்தனர். அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டோரை விரட்டியபோதிலும் தொடர்ச்சியாக பொதுமக்கள் ஒன்றுகூடுகின்றனர்.
இன்றைய தினம் காலை வேளையில் கோப்பாய் பொலிஸாரின் வாகனம் அவ்விடத்துக்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தமது வியாபார பொருள்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பொலிஸார் திரும்பி சென்ற பின்னர், குறித்த இடத்துக்கு திரும்பிவந்து தமது மரக்கறி பொருள்களை எடுத்து சென்றுள்ளனர்.
நாடுபூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.