வவுனியா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: பகிடிவதையே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

MediaFile 1 2

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதுடைய மாணவர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த அந்த மாணவரின் மரணத்திற்குப் பகிடிவதையே (Ragging) காரணமாக இருக்கலாம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் உயிரிழந்ததாகப் பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபானச் செறிவு (Alcohol Content) இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் திடீர் மரணத்திற்குப் பகிடிவதையே காரணம் என உறவினர்கள் உறுதியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிரிழந்த மாணவரின் சகோதரி நடத்திய விசாரணையில், கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்து ஒன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்குப் பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பகிடிவதை குறித்து அவர் பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா ஆதார வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு வினவியபோது, அங்குள்ள வைத்தியர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவரசங்குளம் காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version