தொற்றிலிருந்து குணமடைந்த பின்பே தடுப்பூசி எடுக்கவேண்டும்!

Vasan Ratnasingam 1

கொவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் 28 நாள்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து 14 நாள்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரோ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன, இந் நிலையில், கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அவைகுறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே வைத்திநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்படி தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்கள் அதிக நாட்டம் காண்பித்து வருகின்றார்கள்.

முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்குரிய காலப்பகுதியில் தொற்று ஏற்படும் பட்சத்திலும் மேற்குறிப்பிட்ட காலஅளவின் அடிப்படையிலேயே இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறவேண்டும்.

கொவிட் – 19 வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், பரிசோதனை மூலம் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

அவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர் மேற்கூறப்பட்டவாறான காலஅளவுகளின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version