அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட சுமார் 166 பில்லியன் டொலர் வரிப்பணத்தை மீள வழங்குவதற்கான விசேட நடைமுறையை அமெரிக்க அரசாங்கம் எதிர்வரும் ஏப்ரல் 20, திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தினால் விதிக்கப்பட்ட இந்த வரிகள் சட்டவிரோதமானவை என நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இத்தகைய வரிகளை விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது எனவும், அந்த அதிகாரம் காங்கிரஸிற்கே உண்டு எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்தத் தீர்ப்பானது 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்ததுடன், அவர்கள் செலுத்திய தொகையைத் திரும்பப் பெறவும் வழிவகை செய்துள்ளது.
இறக்குமதியாளர்களுக்குப் பணத்தை விரைவாகவும் நேர்த்தியாகவும் திருப்பி வழங்குவதற்காக ‘கேப்’ (CAPE – Consolidated Administration and Processing of Entries) எனும் புதிய மின்னணு முறையை அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு இறக்குமதிக்கும் தனித்தனியாகப் பணம் வழங்காமல், ஒரு நிறுவனத்திற்குச் சேர வேண்டிய மொத்தப் பணத்தையும் ஒரே மின்னணுப் பரிமாற்றமாக வழங்க இந்த முறை உதவும். முதற்கட்டமாக, 56,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய 127 பில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
அமெரிக்க வர்த்தக வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை அரசாங்கம் மீள வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவெனக் கருதப்படுகிறது. தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அவர்கள் செலுத்திய வரிப்பணத்துடன் உரிய வட்டியும் சேர்த்து வழங்கப்படவுள்ளது. இந்த வரி மீளளிப்பு நடவடிக்கை அமெரிக்க நிறுவனங்களின் நிதி நிலையை வலுப்படுத்த உதவுமெனவும், சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துமெனவும் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.