மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் (PHI) கைப்பற்றப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பகுதியில் இயங்கும் கோழி இறைச்சி விற்பனைத் தளம் ஒன்றில், பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளின் இறைச்சி சூட்சுமமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகச் சுகாதாரப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களையும் இலக்கு வைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் இன்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, ஒரு குறிப்பிட்ட விற்பனை நிலையத்தில் ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோ கிராம் இறைச்சி, சிறிய பொதிகளாகக் கட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இவை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மனிதப் பாவனைக்கு முற்றிலும் தகுதியற்ற அந்த இறைச்சித் தொகுதியை உடனடியாகக் கைப்பற்றிய அதிகாரிகள், அதனைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே அழித்தனர். சட்டவிரோத மற்றும் சுகாதாரச் சீர்கேடான முறையில் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு எதிராகக் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் இலாப நோக்கில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான இடங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.