போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில்,
‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, வன்முறை நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்!’ என குறிப்பிடப்பட்டுள்ளது..
Leave a comment