இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜனித் மதுசங்க டி சில்வா என்ற ‘பொடி லெசி’யை (Bodi Lassie) 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், பிற்பகல் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் (Baddegama Magistrate Court) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு முதல் பொடி லெசி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன
அவற்றில் 5 கொலை வழக்குகள் 13 கொலை முயற்சி மற்றும் கடுமையான உடல் ரீதியான தீங்கு மற்றும் 8 குற்றங்களைத் திட்டமிட்டு உதவி செய்தமை உள்ளிட்டவை அடங்கும்.
பலப்பிட்டிய நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்த ‘பொடி லெசி’, 2025 ஜனவரி 16 அன்று இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபரின் விசேட கோரிக்கையின் பேரில், இந்திய அதிகாரிகளால் அவர் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்.