கூட்டமைப்பின் செயற்பாடுகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல்! – தம்மானந்த தேரர்

Dhammananda Thera

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த சங்கரி நேற்று (01) அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்ற போதே தம்மானந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஏனைய பிரதிநிதிகளும் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று நாட்டையே தர்மசங்கடத்தில் மாட்டி , தமது குறுகிய அரசியல் நலன்களை நிறைவேற்றப் பார்க்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு எமது கலாசாரம் பிடிக்கவில்லை. அவர்கள் அதிகாரத்துக்காக தனியான பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், வடக்கில் நிலைமைகள் மாறியுள்ளன. சாதாரண மக்கள் சிங்கள மக்களுடன் நட்பாக இருக்க முயற்சிக்கின்றனர்.

ஆனந்த சங்கரி, சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லுறவை வளர்க்கும் அரசியல்வாதியாக உள்ளார்.

இவ்வாறானவர்களை அரசியல் களத்திலிருந்து அகற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்ததுவருகின்றது. அவர்கள் எப்போதும் சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தவே முயற்சித்தனர்.

அன்று புலிகள் அமைப்பினர். செய்ததையே இன்று வடக்கின் அரசியல்வாதிகள் செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செல்லும் போது, எமது நாட்டில் நிலவும் நல்லிணக்கத்துக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பௌத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. கண்டி எசல பெரஹெராவுடன் கூட, அந்த கலாசார மற்றும் மத தொடர்பு தெளிவாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகளின் போரினால் அனைத்து சிங்கள, தமிழ் சமூகங்களும் பாதிக்கப்பட்டன.

இந்த நாட்டில் சமாதானத்தை மதிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை புலிகள் அழித்தார்கள். மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களது இனவாதக் கருத்துக்களுடன் முன்வந்த தமிழ் மக்களின் தலைவர்கள், எப்போதும் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராகவே செயற்பட்டுள்ளனர்.” – என்றும் தேரர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலையே நடத்துகின்றது என்று இச்சந்திப்பின் பின்னர் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version