இந்து கோவில்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உயர் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் இந்து ஆலயங்களில் காணப்பட்ட இந்து ஆலயங்களிலே விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதி இந்து கோவில்களில் உள்ள விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன. அத்துடன் திருடப்பட்ட விக்கிரகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ஒருவரை (வயது-34) முதலில் கைது செய்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கொழும்புக்கு விரைந்த உப பொலிஸ் குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20க்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர். அந்த விக்கிரகங்களை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட விக்கிரகங்களில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் காணப்படும் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இராணுவச் சிப்பாய் ஒருவர் (வயது-42) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment