” இந்த அரசின் வரவு – செலவுத் திட்டமானது ஆண்டிகள்கூடி மடம் அமைத்த கதைபோலவே உள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கஜானாவில் பணம் இல்லை. அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறப்பானதொரு பாதீட்டை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுவது நகைச்சுவைத்தனமானது. பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மேலும் உயரும் என எதிர்வுகூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசிடம் இல்லை.
இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு வறுமையில் சிக்கித்தவிக்கையில் எதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி? இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. எனவே, யாருடன் போரிடப்போகின்றீர்கள்? பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா என்ற கேள்வியும் எழுகின்றது.
அத்துடன், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்டிக்கின்றோம். ” – என்றார்.
#SriLankaNews
Leave a comment