தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

world 117

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி கோரிக்கை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் மற்றும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று (ஏப்ரல் 11, 2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்து, உறுதிப்பத்திரங்களில் உள்ள அளவின் அடிப்படையிலேயே உரியவர்களிடம் கையளிக்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். தற்போது 17 பேர் மட்டுமே தமது காணி உறுதிகளைச் சமர்ப்பித்து காணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், விகாரை அமைந்துள்ள எல்லைக்குள் இன்னும் பலருடைய காணிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காணிகளை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். தற்போது அடையாளம் காணப்பட்ட 17 பேருக்கு மட்டுமே காணிகளை மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால், மீண்டும் உங்கள் காணிகளைப் பெறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் போராட வேண்டிய நிலை ஏற்படும்,” என்று சாருஜன் சுகுமாரி எச்சரித்துள்ளார்.

எனவே, தையிட்டி விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் காணி உரிமையுள்ள பொதுமக்கள், உடனடியாகத் தங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களுடன் முன்வந்து தமது பூர்வீகக் காணிகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நில அளவீட்டுப் பணிகள் மற்றும் ஆவணச் சரிபார்ப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version