நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

world 230

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மொரகஹஹேன, வேல்மில்ல பகுதியில் மக்கள் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்துள்ளனர். இதன்போது, குறித்த பெண் தனது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் மிகுந்த அச்சமடைவதாகவும், எனவே பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறும் அண்டை வீட்டாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையினால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டார், அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தடியால் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் அலறுவதும், அவரை ஒருவர் தடியால் அடிப்பதும் அங்கிருந்த ஒருவரால் காணொளி எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியது. இக்காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட மொரகஹஹேன பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது, இத்தாக்குதலுடன் தொடர்புடைய வேல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரைக் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஹோரண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். விலங்குகள் மீது அன்பு செலுத்துமாறு கோரிய பெண் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version