கடற்படையினரின் தேவைக்காக யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் நில அளவை திணைக்களத்தினால் மாதகல் கிழக்கு J-150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தது.
நேற்று இரவு 11 மணியளவில்தமது வீட்டுக்கு வருகைதந்த கடற்படையினர், காணியினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து கையொப்பம் வைக்குமாறு கேட்டதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இடங்களில் அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
காணியினை அளப்பதற்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்திய நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கடற்படை முகாமிற்கு முன்பு அமர்ந்து இருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த இளவாலை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் எதிர்வரும் இரண்டாம் திகதி கலந்துரையாடுவதாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாக்குறுதி வழங்கிய நிலையில், போராட்டம் முடிவடைந்தது.
இதேவேளை, இன்று காலை முதல் குறித்த பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
1 Comment