இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜயசூரிய விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் (SLC) தொடங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லே டி சில்வா, வெளிநாட்டு பயிற்சியாளர்களில் சிலருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். எனினும், பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை அடையும் வரை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் கலந்துரையாடல்கள் நிறைவடைந்தவுடன் பொது அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கிரிக்கெட் தொடர்:
இலங்கையின் அடுத்த போட்டி மார்ச் நடுப்பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடராகும். இந்நிலையில், அந்தத் தொடருக்கு முன்பே புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க முடியும் என்று டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2023 உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட மோசமான செயல்திறன் மற்றும் சாம்பியன்ஸ் டிரோபிக்கு தகுதி பெறத் தவறிய பின்னணியில் ஜயசூரிய அணியின் பொறுப்பை ஏற்றார். அவரது பதவிக்காலத்தில், மொத்தம் 75 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை விளையாடியது. இதில் 34 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.