பாராளுமன்ற வளாகத்திற்குள் ஊழியர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானம் பயன்படுத்துவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் எவ்வித அடிப்படை ஆதாரமுமற்றவை எனச் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கை பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் பாவிப்பதாகக் கூறப்படும் ஊழியர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித ஆலோசனையையும் அல்லது உத்தரவையும் வழங்கவில்லை.
பாராளுமன்ற உணவறைப் பகுதிக்குள் ஊழியர்கள் இரகசியமாக மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சபாநாயகர் ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெற இடமளித்தமைக்காகப் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகளைச் சபாநாயகர் குற்றஞ்சாட்டியதாக வெளியாகியுள்ள தகவல்களையும் பாராளுமன்ற செயலகம் முற்றாக மறுத்துள்ளது.
சபாநாயகரின் பெயரையும் பதவியையும் பயன்படுத்தித் திட்டமிட்ட முறையில் இவ்வாறான போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி இணையத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் இத்தகைய போலித் தகவல்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.