மண்டைக்கல்லாறில் உவர்நீர் தடுப்புச் சுவர் – மக்கள் கோரிக்கை!!

dfds

கிளிநொச்சி பூநகரி ஏ -32 வீதியின் மண்டைக்கல்லாறு பகுதியில் உவர்நீர் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் ஒருபகுதி மற்றும் குஞ்சுக்குளம் திக்காய் போன்ற பகுதிகளில் சுமார் 650 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

குறித்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இருந்த உவர்நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில், கடல்நீர் மண்டைக்கல்லாறு வழியாக பரவிவருவதால் இந்த வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

இவ்வாறாக கடல் நீர் பரம்பல் அதிகரித்து வருவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் தாங்கள் பயிர்செய்து வந்த நிலங்கள் கூட தற்போது உவர் நிலங்களாக மாறி வருகின்றன. எனவே தமது விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் உவர்நீர்த் தடுப்பணைகளை அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, ஏ – 32 வீதியின் மண்டைக்கல்லாறு பாலத்துக்கு அண்மித்த பகுதியில் உவர்நீர் தடுப்பு சுவர் ஒன்றை அமைக்கும்போது இதனை முழுமையாக தடுக்க முடியும். இது தொடர்பில் ஆய்வுகளை மேற் கொண்டு அதனை Integrated watershed & water Resources planning project (I.w.wR.M.P) என்ற திட்டத்தின் மூலம் செய்வதற்குரிய முன்மொழிவுகளை அனுப்பியுள்ளோம்.

மேற்படி திட்டத்தின் கீழ் தடுப்பு சுவர்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Exit mobile version