குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை முறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிஐடி அதிகாரிகள் தன்னிடம் கேட்ட கேள்விகள் குறித்து நாமல் ராஜபக்ச விளக்கினார்.கடந்த காலங்களில் தான் கலந்துகொண்ட கல்வி கருத்தரங்குகள் மற்றும் கட்சி கூட்டங்களில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அரசாங்கத்திற்கு சார்பானவர்களைப் பாதுகாத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை மட்டும் இலக்கு வைப்பதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்தார்.
எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை. மொடியுல் (Module) மோசடி மற்றும் நிலக்கரி மோசடிகளை மறைப்பதற்காக எங்களை விசாரணைக்கு அழைத்து நாடகமாடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.
அரசாங்கம் விசாரணைக்கு அழைக்கும் எந்நேரமும் நான், எனது தந்தை, தாய், தம்பி என அனைவரும் வருவதற்குத் தயாராகவே இருக்கிறோம். தேவைப்பட்டால் வீட்டில் உள்ள செல்லப்பிராணியையும் அழைத்து வரத் தயார் என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
கொள்கலன் விடுவிப்பு மற்றும் நுவரெலியா ஐஸ் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாகத் தான் எழுப்பிய கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இன்னும் பதில் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளுக்குப் பயந்து தாம் மௌனமாக இருக்கப்போவதில்லை என்றும், மக்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவோம் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.