இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமான விவகாரத்தில், அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு (COPF) தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் தவறிவிட்டதாக முன்னாள் ஆளுநரும், சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினருமான ரஜித் கீர்த்தி தென்னக்கோன் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியத் தரப்பு ஒன்றிற்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மர்மமான முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி திருடப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் மற்றும் நிதித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருட்டானது இணையவழி மோசடிக்காரர்களால் (Cyber Criminals) மேற்கொள்ளப்பட்டது என அரசாங்கம் கூறி வருவதை ரஜித் கீர்த்தி தென்னக்கோன் அப்பட்டமான பொய் எனச் சாடியுள்ளார். இது திட்டமிடப்பட்ட உள்வீட்டு மோசடி என்பதையே அவர் தனது கருத்துக்களின் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சு ஒரு மாத கால அவகாசம் கோரியிருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஏற்கனவே கோப்புகளில் இருக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஏன் இவ்வளவு காலம் தேவைப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது உண்மைகளை மறைப்பதற்கும் விசாரணைகளைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளப்படும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார்.
நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், உண்மைகளைக் கண்டறியவும் பின்வரும் நடவடிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார். அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் உடனடியாகத் தலையிட்டு விசாரணைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் இது குறித்துப் பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த மோசடி குறித்து ஆராய உடனடியாக ஒரு நாடாளுமன்றத் துணைக் குழு நியமிக்கப்பட வேண்டும்.

