இனவாத வலைக்குள் நாடு சிக்காது’: இலங்கை தினக் கொண்டாட்டம் மூலம் நல்லிணக்கம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

250925 AKD UNGA

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தல் மற்றும் கருத்துகள், பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (நவம்பர் 22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து “இலங்கை தினம்” கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றமை, இதில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் பிரதிநிதிகளாலும் பாராட்டப்பட்டதுடன், இது தொடர்பாகத் தமது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தலைமையின் கீழ் இலங்கை தின தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டிற்கும், நாட்டில் தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கும் நிபந்தனையின்றி தாம் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்

Exit mobile version