மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்துகம பிரதான நீதவான் M.N.M. நாணயக்கார முன்னிலையில் இன்று (08) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரான தவிசாளரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடருமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. மத்துகம பிரதேச சபையின் செயலாளர், தவிசாளர் தன்னைத் தாக்கியதுடன் கடமைக்குத் தடையாக இருந்ததாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி 02 ஆம் திகதி தவிசாளர் கசுன் முனசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இன்று வரை (ஜனவரி 08) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.