ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
திருகோணமலை, மனையாவெளி பகுதியில் அமைந்துள்ள ‘சென்டி பே’ (Sandy Bay) கடற்கரையை பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்துவதற்கும், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் விரிவான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் அதிகளவான இலங்கை வீரர்களை ஈடுபடுத்துதல், படைவீரர்களின் நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப்படையின் ஹெலிகொப்டர் அணியை நவீனப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
ஒலுவில் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏற்படும் கடலரிப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. துறைமுகத்தை மீண்டும் வினைத்திறனாகப் பயன்படுத்துவது குறித்து ‘நாரா’ (NARA) நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியவள ஆய்வை (Feasibility Study) மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறத்தல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்குதல் போன்றவற்றில் எஞ்சியுள்ள தடைகளை நீக்குவது குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.