மன்னார் மாவட்டம் கோந்தை பிட்டி பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத நீர்த்தாங்கியொன்று தகர்க்கப்பட்டது.
சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு, கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (15) தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீர் விநியோகம் இடம்பெறாத நிலையில், நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் குறித்த நீர்த்தாங்கி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், நீர்த்தாங்கியை அகற்றுமாறும் மக்கள் கோரியிருந்தனர்.
ஏனெனில் நீர்த்தாங்கியில் பாரிய வெடிப்புகள் காணப்பட்டு உடைந்து விழுந்து கொண்டு காணப்பட்டமையால் அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்ததுடன், உடனடியாக அப்பகுதி மக்களை பாதுகாப்பிற்காக வெளியேற்றினர்.
பின்னர் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாத வண்ணம் நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த நீர்த் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன், நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில், நீர்த்தாங்கி தகர்க்கப்பட்ட போது ஆந்தை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
#SrilankaNews