மீண்டும் போட்டியிடமாட்டேன்! – கோட்டா வாக்குறுதி

கோட்டாபய 2

“நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை. மக்கள் எனக்கு 5 வருடகால ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பேன். நாட்டைச் சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகின்றேன். 6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைக்கான உதவிக்காக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து நீண்டகால எரிபொருள் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளேன்.

சலுகை கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட வேண்டும். இராணுவத்துக்கும் பொதுச் சேவைக்குமான ஒதுக்கத்தை குறைக்க முடியுமே தவிர இரத்துச் செய்ய முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக இரத்துச் செய்து விட்டு வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version