எமது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களின் போதும் வடபகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாங்கள் எம்மாலான சகல ஒத்துழைப்பினையும் வழங்கி வருகிறோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே ரமேஸ் பத்திரண இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்களின் மிகவும் முக்கியமான வாழ்வாதார கைத்தொழிலாக பனைசார் உற்பத்தி பொருட்கள் காணப்படுகின்றன.
வடக்கில் 12 ஆயிரம் குடும்பங்கள் பனை சார்ந்த கைத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். குறித்த பனை சார் உற்பத்தினை நம்பி வாழ்ந்து வரும் குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை இந்த அரசாங்கத்தில் முன்னெடுத்து வருகின்றோம்.
பனை அபிவிருத்தி சபையினை முன்னோக்கி நகர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதாவது நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருப்பதை முன்னேற்றுவதற்கு சில திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம். அத்தோடு பனங்கள்ளு உற்பத்தியினை மேம்படுத்தி அதில் பெறும் வருமானத்தினை எடுத்து சபையினை முன்னேற்றவுள்ளோம்.
பனைசார் உற்பத்தி மற்றும் பணங்கள்ளுக்கு இலங்கையில் மாத்திரமல்ல உலக நாடுகள் அனைத்திலும் கேள்வி அதிகமாக காணப்படுகின்றது.நான் அமைச்சராக பதவியேற்ற பின் நான்கு தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பனை சார் உற்பத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன்.பனை அபிவிருத்தி சபையினை நிதி ரீதியிலே முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பனை சார் உற்பத்தி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியமாகும்.
குறித்த கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தியடையாத நிலையில் கீழ்த்தளம் மாத்திரம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் இரண்டாம் தளம் விரைவில் கட்டி முடிக்கப்படும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment