வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதனடிப்படையில் வேலணை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவானார்.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (20) முற்பகல் 11.30 மணிக்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 20 ஆசனங்களை கொண்ட வேலணை பிரதேச சபையில் இம்முறை தேர்தல் ஆசன விஷேட பகிர்வின் மூலம் 2 ஆசனங்கள் கூடுதலாக வழங்கப்பட்டதன் அடிப்படையில் 22 உறுப்பினர்கள் உள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்களையும் தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைக் குழுக்கள் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இந்நிலையில் ஏகமனதாக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் முன்மொழியப்பட்டு தெரிவானார்.
இதன் போது சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் வெளிநடப்பு செய்தார். இதேவேளை உப தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் ஏகமனதாக தெரிவானார்.