இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா அழைப்பு
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்த, இராணுவம் சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 1ஆம் இலக்க படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவை யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகள் உட்பட, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது ஆராயப்பாட்டுள்ளது.
வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட தூதுவர், யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவர்கள் உட்பட பலதரப்பட்ட சமூகங்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.
இந்த நிலையில், ஜனநாயக இலங்கைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஆற்றல்மிக்க குரல்களும் பங்காளிகளும் அவசியம் என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.