இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை

tamilni 350

இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் ஒப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும், சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்துமாறும் அவர்கள், இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களும் மனித உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என்றும் அவர்கள் மேலும் பாகுபாடு மற்றும் களங்கத்தை எதிர்கொள்ளாமல் கண்ணியத்துடன் வாழ தகுதியானவர்கள் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘யுக்திய’ எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது சித்திரவதைகள் மற்றும் தவறான சிகிச்சைகள் பதிவாகியுள்ளன.

போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறையின் தற்போதைய சூழல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

இந்தநிலையில் மருந்தை மறுக்கும் உரிமை உட்பட போதைப்பொருள் பாவனையாளர்களின் சுயாட்சி மற்றும் பாதிப்பைக் குறைக்கும் கண்ணோட்டத்தில் மறுவாழ்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்டாய மறுவாழ்வு மையங்கள் உடனடியாக மூடப்பட்டு, அவை, தன்னார்வ, சான்றுகள் அடிப்படையிலான, சமூக சேவைகள் மையங்களாக மாற்றப்பட வேண்டும்.

இதன்போது தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மக்களை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பும் நீதித்துறை செயல்பாட்டில் உள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version