தமிழீழ விடுதலை புலிகளிடம் சுருட்டிய பெருமளவு பணம் மற்றும் நகைகளே இன்று வெளிவந்திருக்கும் ராஜபக்சக்களின் பெருந்தொகை சொத்துக்களுக்கு காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
தோல்வியுற்ற ஒரு பதவியை இழந்த அரசாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக பதவி விலக வேண்டும். இது சிங்கள – தமிழ் – இஸ்லாமிய மக்களின் ஏகோபித்த குரலாகக் காணப்படுகின்றது. இவர்கள் இந்த நாட்டினுடைய சொத்துக்களை முடக்கி இந்த நாட்டு மக்களை தெருவுக்கு கொண்டு வந்து பொருளாதார ரீதியாக மக்களை அவல நிலைக்கு உள்ளாக்கினர்.
காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வடகிழக்கிலும் விலைவாசி ஏற்றம் காரணமாக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணங்கள், விடுதலைப் புலிகளுடைய சொத்துக்கள், விடுதலைப் புலிகளுடைய வெளிநாட்டு சொத்துக்கள் ஆகியவற்றை அபகரித்து இன்றும் தன்வசம் வைத்திருந்த வெளிநாடுகளில் முதலீடு செய்கின்ற ராஜபக்ச குடும்பத்தின் உடைய சொத்து விபரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இதனைவிட இலங்கையினுடைய நிலங்களையும் வளங்களையும் விற்பனை செய்து சொத்துக்களை அபகரித்து இலங்கையிலே இருக்கின்ற அனைத்து சமூகங்களையும், குறிப்பாக சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களை தெருவுக்குக் கொண்டு வந்து தன்னுடைய குடும்பத்தை பணத்தால் பெருக்கி வைத்திருக்கக் கூடியநிலையில் ஹக்கர்ஸ் என்று சொல்லப்படுகின்ற இணையத்தள ஊடுருவிகள் பல நாட்டுத் தலைவர்களின் உடைய சொத்து விபரங்களை ஆராய்ந்து வரும் நிலையில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் சில உண்மைத் தன்மையான விவரங்களோடு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆகவே நான் நினைக்கின்றேன் இன்னும் ஒரு சில வாரங்களில் இது முழுமையாக வெளிவந்த பின்னர் அவர்களே அதற்குரிய விடைகளை முன்வைப்பார்கள். ராஜபக்சக்களே தங்களது அனைத்துக் கொள்ளைகளையும் வெளியிடுவார்கள்.
சீனியில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், பாம் ஒயிலில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், நிலங்களை விற்று எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், விடுதலைப் புலிகளின் சொத்துக்களை தங்களுடைய வசமாக்கி எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews

